"வெள்ளை மாளிகை" முன்பாக வட அமெரிக்க தமிழர்கள் நாளை பிரமாண்டமான பேரணி: எல்லோரையும் அணிதிரள வேண்டுகோள்!

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் இன அழிப்புப் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை கோரும் பிரமாண்டமான தமிழர் பேரணி அமெரிக்கத் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலத்தின் தேவையும், கட்டாயமும் கருதி இந்தப் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு வட-அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.அரச தலைவர் பராக் ஓபாமாவையும் அமெரிக்க வெளியுறவு இராஜாங்கச் செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையார் அவர்களையும் நாம் வேண்டிக் கேட்கவுள்ளோம்" என இந்த பேரணி ஏற்பாட்டின் செய்தித் தொடர்பாளர் வோசிங்டன் டி.சி. நகரில் இருந்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -
மரியாதைக்குரிய பராக் ஒபாமா அவர்கள், அமெரிக்காவின் அரச தலைவராக மட்டுமன்றி, இந்த உலகத்தின் தலைவராகவும் ஆகி - நீதி மறுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கை ஒளியாக இன்று விளங்குகின்றார். அதனாலேயே எமக்கான நீதி கிடைக்க வழி செய்யுமாறு கேட்டு நாங்களும் அவரிடம் போகின்றோம்
அதுமட்டுமல்லாது -
அமெரிக்காவின் முன்னைய நிர்வாகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற கொள்கை தான், அரசியல் அபிலாசைகளுக்கான நியாயமான எங்கள் விடுதலைப் போரை, "பயங்கரவாதம்" எனத் தவறாகக் கொச்சைப்படுத்தி தமிழர்களை இன்றும் சீரழிக்கின்றது.
பழைய அமெரிக்க நிர்வாகத்தின் அந்த கொள்கையை அடிப்படையாக வைத்துப் போரை நடத்தித்தான், சிறிலங்கா இன்றும் எம் மக்களைக் கொன்று குவிக்கின்றது. அந்த வகையில் தமிழர்கள் மீது பூசப்பட்டுள்ள இந்த "பயங்கரவாத"ச் சாயத்தை அகற்றி - எமக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டிய ஒரு தார்மீகக் கடமையும் அதிபர் ஒபாமா அவர்களுக்கு உண்டு. அதனாலேயும் தான் நாம் அவரிடம் செல்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், வட அமெரிக்கத் தமிழர்களை நோக்கிய ஒரு செய்தியாக -
"வட-அமெரிக்காவில் வாழ்கின்ற எங்களால், வன்னி மக்களுக்காக இன்று செய்யக் கூடிய ஆகக் குறைந்தது இது தான். அதனால், வட-அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரையும் - அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் சரி, கனடாவில் வாழ்ந்தாலும் சரி - உரிமையோடு வற்புறுத்தி, அன்போடு கட்டாயப்படுத்தி," இந்தப் பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுத்த அவர்

அமெரிக்காவிலும், கனடாவிலும் - எல்லா மாநிலங்களிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் இந்த பேரணிக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர் எனவும், அதனால், பயண உதவி தேவையான தமிழர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள செயற்பாட்டாளர்களை நேரடியாகவோ, அல்லது info@tamilsagainstgenocide.org என்ற மின்னஞ்சல் முகவரியில் பேரணி ஏற்பாட்டின் மையச் செயலகத்தையோ தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டார்.

அதேவேளை, இந்த பேரணி நடைபெறும் அதே நேரத்தில் - அதே இடத்தில் - சிறிலங்கா அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பேரணியும் நடைபெறவுள்ளது பற்றி கருத்து தெரிவித்த அவர் -

சிறிலங்கா அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த பேரணியையும் மீறி எமது குரல் அரச தலைவர் ஒபாமாவுக்கும், அமெரிக்க அரசுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காகவே, பல்லாயிரக்கணக்கில் அங்கு அணிதிரளுமாறு தமிழர்களிடம் நாம் வேண்டுகின்றோம் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் -
"இந்த நாடு அழகானது யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எந்தக் கருத்தையும் வெளியிடும் சுதந்திரத்தை இது எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றது. சிறிலங்காவின் பேரணியில் பங்கேற்போருக்கு இருக்கும் இந்த உரிமைகளை நாம் மதிக்கின்றோம்," என்று தெரிவித்ததுடன் -

"தமிழர்களாகிய நாம் மிகவும் பண்பான ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த உலகின் மரியாதைக்கும் உரியவர்கள். எங்களது இந்தப் பெருமைகளை நாம் காக்க வேண்டும். அதனால், பேரணியில் பங்கேற்கும் தமிழர்கள் - எந்த வகையான ஆத்திரமூட்டல் செயல்களுக்கும் உள்ளாகாமல் - பொறுமையுடனும் நிதானத்துடனும் எங்கள் கோரிக்கைகளை வலிமையுடன் முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். அப்போது தான் நாம் சொல்கின்ற செய்தி உரியவர்களுக்கு சரியாகப் போய்ச் சேரும்" எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

செய்திகள் : புதினம்

தொடர்புடைய முந்திய பதிவொன்று =>


"வெள்ளை மாளிகை" முன்பாக வட அமெரிக்க தமிழர்கள் நாளை பிரமாண்டமான பேரணி: எல்லோரையும் அணிதிரள வேண்டுகோள்!SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்