பிரித்தானியாவில் 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்

தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சிவதர்சன் சிவகுமாரவேல் (21) , குட்டி மணியம் (28) ஆகிய இரு இளையவர்களே இவ் உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களாவர்.
பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

  1. சிறிலங்காவில் உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்.
  3. வன்னியில் உள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.
  4. இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
  5. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளையே மேற்படி இருவரும் முன்வைத்து தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் இப்போராட்டம் தாய் தேசத் தமிழுறவுகளின் அவலங்களிற்கு பிரித்தானியாவிடமிருந்து நிரந்தர முடிவு கிட்டும் வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' தமிழின விடிவிற்காக இந்திய அரசிற்கு எதிராக உண்ணாநிலையில் இருந்து உயிர்விட்ட தியாகி திலீபனின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது.தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்கும் மாணவர் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைவரையும் இப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.

செய்திகள்: பதிவு

பிரித்தானியாவில் 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்